மும்பை : ஹர்திக் பாண்டியாவை அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதி வரை ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஒன்றாகவே இணைந்து இருந்தனர். அவர்கள் அப்போது ஒன்றாக இணைந்து வெளியே சென்ற வீடியோக்களை அப்போது அவர்களின் சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர்.

அதன் பின் கடந்த ஆண்டு இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அப்போது காயத்துடன் இருந்த அவர், அதில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற நோக்கில், ஐபிஎல் தொடருக்கு முன் நான்கு மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அவர் தன் குடும்பத்தினருடன் இருக்கவில்லை. அதே காலகட்டத்தில் தான் நடாஷா அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக நேரம் செலவிட்டதால் தான் ஹர்திக் பாண்டியா குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டதாக தற்போது சிலர் கூறி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை அவர் பறித்ததால் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் அவரை கடுமையாக கேலியும், கிண்டலும் செய்து போட்டிகளின் போது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்வு ஊசலாட்டத்தை சந்தித்தது. இந்த நிலையில் அவரது மனைவியும் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்வில் என்ன நடந்தாலும் அது நமக்குத் தேவையில்லாத விஷயம்தான். அதனால் அவரது கிரிக்கெட் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டாலோ, அவர் ஃபார்ம் இழந்தாலோ அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். அது மட்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக உள்ளது.