விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனை கே கே ஆர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் தோனி, ரோகித் சர்மா ஆகியோர் தங்களுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ற பெருமையை தற்போது ஸ்ரேயாஸ் தான் பெற்றிருக்கிறார்.
இந்த பெருமைக்கு ஏற்ப ஸ்ரேயாஸ் தலைமையில் கே கே ஆர் அணி பட்டையை கிளப்பி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் கூட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.

இதே போன்று டெல்லி அணி பேட்டிங் செய்தபோதும் கே கே ஆர் வீரர்கள் அபாரமாக பந்துவீசி 166 ரன்களில் சுருட்டினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ், 270 ரன்கள் அடிப்போம் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. நாங்கள் எடுத்த தொடக்கத்தை பார்த்த பிறகு 210 முதல் 220 ரன்கள் அடிப்போம் என்று நினைத்தோம்.
ஆனால் 270 என்பது cake-ல் இருக்கும் செர்ரி பழம் போல் மாறிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னது போல் சுனில் நரேன் தொடக்க வீராக களமிறங்கி அதிரடியாக ஆடுவதற்காக வைத்திருக்கிறோம். அவரால் முடியவில்லை என்றால் முன் வரிசையில் இருக்கும் மற்ற வீரர்கள் அந்த பணியை செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதுதான் எங்களுடைய திட்டம்.
இதுபோன்று இளம் வீரர் ரகுவான்சி அபாரமாக விளையாடினார். அவர் அச்சமின்றி செயல்பட்டார். முதல் பந்து முதல் பயமின்றி விளையாடினார். அவருடைய உழைப்பு பிரமாதமாக இருக்கிறது. மேலும் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு சரியாக விளையாடுகிறார். அவருடைய ஷாட்கள் எல்லாம் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது.
இதேபோன்று மிட்செல் ஸ்டார்க் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். அணிக்காக அவர்களை பொறுப்பை எடுத்துக் கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எங்களுடைய வீரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்காக ஆதரவாக இருக்கிறார்கள். ஹர்சித் ரணா தற்போது காயம் காரணமாக விளையாடாமல் இருக்கிறார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
வைபவ் முதல் இரண்டு ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது போன்ற ஒரு போராட்ட குணத்தை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மூன்று வெற்றியை பெற்று விட்டோம் என்பதற்காக நாங்கள் ஆடக்கூடாது எப்போதுமே அமைதி காக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.