மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் அதிக ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக அந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தங்கள் அணியின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்பதை கூறிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை வீழ்த்துவது குறித்து பேசி இருக்கிறார். 3 ஐபிஎல் கோப்பைகள் வென்றது மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலேயே வெற்றிகரமான அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மாற்றப் போவதாக அவர் கூறினார்.

அதாவது ஐபிஎல் தொடரில் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை முந்த வேண்டும் என குறிப்பிட்டு இவ்வாறு கூறியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளனர்.
தற்போது மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மேலும் மூன்று கோப்பைகளை வென்று ஆறு ஐபிஎல் கோப்பைகளுடன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை முந்த வேண்டும் என கம்பீர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "நாங்கள் இன்னும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை விட இரண்டு கோப்பைகள் பின்தங்கி இருக்கிறோம். நாங்கள் இன்று வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னும் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக மாறவில்லை. அதை செய்ய வேண்டும் என்றால் நாங்கள் இன்னும் மூன்று முறை இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அதிக முயற்சி வேண்டும்." என்றார்.
மேலும், "எங்களது அடுத்த இலக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐபிஎல் தொடரின் மிக வெற்றிகரமான அணியாக மாற்ற வேண்டும். அதைவிட மிகச் சிறந்த உணர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், அதற்கான பயணம் இப்போதுதான் துவங்கி உள்ளது. ஐபிஎல் தொடரில் நீங்கள் நுழையும் போது முதலில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று எண்ணுவீர்கள். பிளே ஆஃப் சுற்றை நெருங்கும்போது புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்ற பின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்கள். பின்னர் இறுதிப் போட்டியையும் வெல்ல வேண்டும் என்று விரும்புவீர்கள். இந்த ஒவ்வொரு அடியிலும் உற்சாகம், சவால்கள் மற்றும் பதற்றம் நிறைந்திருக்கும்" என்றார் கவுதம் கம்பீர்.