டெல்லி : கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால், பாஜகவில் இருந்து மட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தவர் கவுதம் கம்பீர். இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கவுதம் கம்பீர் 10 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்றுள்ளார்.

கேப்டனாக இருந்த தோனியுடனான மோதல் காரணமாக இந்திய அணியில் இடத்தை பறி கொடுத்தார் கவுதம் கம்பீர். அதன்பின் 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கவுதம் கம்பீர், திடீரென நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியில் கவுதம் கம்பீர் வெற்றிபெற்றார்.
அதன்பின் பாஜக எம்பி-யாக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், திடீரென மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்பினார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது பணியால் ஆச்சரியமடைந்த கேகேஆர் அணி, கவுதம் கம்பீருக்கு ஆலோசகர் பதவியை கொடுக்க முன் வந்தது. பழைய பாசம் காரணமாகவும் ஷாரூக் கானின் அழைப்பை மறுக்க முடியாததாலும், கம்பீர் இந்த ஐபிஎல் சீசனில் இருந்து கேகேஆர் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தான் ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனால் கவுதம் கம்பீர் அரசியல் பணிகளில் ஈடுபடுவாரா அல்லது கிரிக்கெட் பணிகளை செய்வாரா என்ற குழக்கம் கேகேஆர் அணி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
