மும்பை: ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. 10 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் 6 தரப்பினர் நேரடியாகவும், 4 அணிகளின் உரிமையாளர்கள் வீடியோ கால் மூலமாகவும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஐதராபாத், கேகேஆர், மும்பை உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் குறைந்தது 6 முதல் 7 வீரர்களை தக்க வைக்கும் அளவிற்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஆகியோர் இனி எதிர்காலத்தில் மெகா ஏலமே தேவையில்லை என்று கருத்து தெரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மறுபக்கம் டெல்லி, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் தரப்பில், ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டமும், சுவாரஸ்யமும் மெகா ஏலத்தில் தான் உள்ளது. களத்தில் மட்டுமே அனைத்து விஷயங்களும் நடந்தால், ஒரு உரிமையாளராக நிர்வாகியாக நாமும் தேங்கி கிடக்க வேண்டிய நிலை வரும். நாம் என்ன கற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாரியா இருவரும் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. குறிப்பாக இளம் வீரர்களை தேடி பிடித்து பயிற்சியளித்து தயார் செய்து மெகா ஏலத்தில் அவர்களை விடுவது தங்களுக்கு சிக்கல் என்று கேகேஆர் அணி தரப்பில் ஷாருக் கான் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் உரிமையாளர் நெஸ் வாடியா பேசுகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக் கானை நன்றாக தெரியும். எங்கள் இருவருக்கும் எந்த காரசார விவாதமும் நடக்கவில்லை. ஷாருக் கான் அவர் அணிக்கு எது சரியோ, அந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார். அனைவரும் தங்களின் கருத்துகளையும், பார்வையையும் வெளிப்படுத்தினர்.
என்ன நடந்தாலும், அணி உரிமையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பின் கருத்துகளையும் பெற்றுக் கொண்ட பிசிசிஐ, இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவினை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் எடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.