சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழகத்தின் தத்துப் பிள்ளையுமான தோனி இன்று ரசிகர்களுக்காக களமிறங்கிய போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்தது. 42 வயதான தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இதன் காரணமாக தோனி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை பெறுகின்றனர். சில டிக்கெட்டுகளின் விலை பல ஆயிரத்தை கடந்து செல்வதாக சமூக வலைத்தளங்களிலும் பதிவுகளை காண முடிகின்றது.

இந்த நிலையில் தோனி களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்துவது வழக்கம். இந்த நிலையில் சில போட்டிகளில் தோனி களமிறங்குவதை தவிர்த்தும் வருகிறார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் விளையாடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த சூழலில் தான் கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது யாருமே எதிர்பாராத வகையில் தோனி களத்தில் இறங்கினார். மூன்று ரன்கள் தான் வெற்றிக்கு இருக்கிறது. எப்படி தோனி வரப்போகிறார் என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த சம்பவம் இருந்தது. இதனால் ரசிகர்கள் தங்களது உயிரை கொடுத்து கத்தி தோனியின் வருகையை கொண்டாடினார்கள்.
அப்போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேகேஆர் வீரர் ஆண்டிரு ரஸிலால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் காதை மூடிக்கொண்டு இந்த சத்தத்தை தாங்க முடியாமல் கதறினார். சிஎஸ்கே ரசிகர்கள் எழுப்பிய சத்தம் சுமார் 125 டெசிபல் அளவை தாண்டி இருக்கிறது. மனிதர்களால் 80 டெசிபல் சத்தத்திற்கு மேல் சென்றால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் தோனி ரசிகர்கள் எழுப்பிய சத்தம் மனிதர்களின் காது ஜவ்வையே கிழித்து விடும் அளவுக்கு இருந்தது. ஆண்டிரூ ரஸிலின் இந்த ரியாக்ஷனை போட்டு இதுதான் தோனியின் மகிமை என்று சிஎஸ்கே ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.