கொல்கத்தா : மயங்க் அகர்வால் மற்றும் கிளாசன் ஆகியோரிடம் எல்லை மீறி நடந்து கொண்ட கொல்கத்தா அணியின் இளம் வீரர் ஹர்சித் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. ஐதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இளம் வீரர் ஹர்சித் ராணா அபாரமாக பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணியை வெற்றிபெற வைத்தார்.

மிட்சல் ஸ்டார்க் எப்படி ஆட்டத்தின் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய பயன்படுத்தப்பட்டாரோ, அதேபோல் இளம் வீரர் ஹர்சித் ராணாவும் பயன்படுத்தப்பட்டார். ஆனால் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் விக்கெட்டின்றி 53 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இளம் வீரர் ஹர்சித் ராணா 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆனால் களத்தில் ஹர்சித் ராணா ஆக்ரோஷமான வீரராக பார்க்கப்பட்டார். ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறிய போது, பவுலிங் செய்த ஹர்சித் ராணா நேராக அவரின் முகத்திற்கு முன் நின்று ஃபிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்பி வைத்தார். 22 வயதாகும் ஹர்சித் ராணா, 33 வயதாகும் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலை ஸ்லெட்ஜிங் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும் மயங்க் அகர்வால் இதுவரை எந்த வீரருடன் களத்தில் மோதிக் கொண்டே இல்லை. அதேபோல் கடைசி ஓவர் வரை அதிரடியாக ஆடிய கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய பின், "வெளியே போ" என்பது போல் ஹர்சித் ராணா செய்கை செய்தார். இதற்கு அங்கேயே கிளாசன் திரும்ப கேட்க முன் வந்த போது, அவரை அமைதிபடுத்தி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அனுப்பி வைத்தார்.
இதனால் பலரும் ஹர்சித் ராணாவை விமர்சிக்க தொடங்கினார்கள். கவுதம் கம்பீர் ஆலோசகராக இருப்பதால், ஹர்சித் ராணாவும் அவரை போலவே செயல்பட தேவையில்லை என்று விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் ஹர்சித் ராணாவின் எல்லை மீறிய செயல்பாடுகளுக்கு கள நடுவர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் லெவல் 1 விதியை 2 முறை மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஹர்சித் ராணாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் எதிர்காலத்தில் இப்படியான செயல்படுகளில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.