மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அதற்கு காரணம் அவர் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பந்து வீசவில்லை என் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
அஸ்வின் விக்கெட் வீழ்த்துவதை விட அதிக ரன்கள் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் பந்து வீசுகிறார். அதன் மூலம் தான் மட்டும் ரன்களை விட்டுக் கொடுப்பதில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால், அவருக்கு அடுத்து பந்து வீசும் வேகப் பந்துவீச்சாளர்களை எதிரணி பேட்ஸ்மேன்கள் குறி வைத்து ரன் குவிக்கிறார்கள் என சேவாக் தன் விமர்சனத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சர்வதேச அளவில் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். டெஸ்ட் தொடர்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை எந்த அணியும் வாங்காது என சேவாக் கூறி இருக்கிறார்.
இது குறித்து வீரேந்தர் சேவாக் பேசுகையில், "உங்கள் ஓவர்களை 6-7 ரன்களுக்கு வீசும்போது, நடுவில் ஒரு செட் பேட்டருடன் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அது கடினமாகிவிடும். அவர்கள் உங்களைப் போல் புத்திசாலிகள் அல்ல. அவர்கள் உங்களைப் போல் தப்பிக்க முடியாது. அதனால் அவர்கள் அதிக ரன்களை கொடுப்பார்கள். எனவே டாட் பால்களுக்காக பந்து வீசக் கூடாது, விக்கெட்டுகளைப் பெறுவதற்காக நீங்கள் பந்து வீசுவது நல்லது. அது என் கருத்து. உங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது, நீங்கள் விக்கெட்டுகளைப் பெற வேண்டும். ரன்களை விட்டுக் கொடுப்பதில் இருந்து தப்பிக்க அல்ல" என்றார்.
மேலும், "இந்திய அணியில் அஸ்வினின் போட்டியாளர்கள் அனைவரும் - சாஹல், குல்தீப் யாதவ் அல்லது வேறு யாரேனும் - விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்கள். தான் ஆஃப் ஸ்பின் பந்துவீசினால் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிப்பார்கள் என்று நினைக்கிறார் அஸ்வின். அதனால்தான் அவர் கேரம் பந்துகளை வீசுகிறார், அதனால்தான் அவருக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் தனது ஆஃப் ஸ்பின் அல்லது தூஸ்ராவை நம்பினால், அவர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றலாம். ஆனால் அது அவருடைய எண்ணம். ஆனால் நான் ஒரு அணியின் வழிகாட்டியாகவோ அல்லது பயிற்சியாளராகவோ இருந்தால், அப்படி நினைக்க மாட்டேன். எனது பந்துவீச்சாளர் ரன்களை சேமித்து விக்கெட்டுகளை எடுக்காமல் இருப்பார் என நினைத்தால் அணியில் இடம் கிடைக்காது" என்றார் சேவாக்.