கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சிறிய இலக்கை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2024 ஐபிஎல் தொடரில் இரவு நேரப் போட்டியில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சையே தேர்வு செய்து வருகின்றன. அதற்கு காரணம் இரண்டாவது பாதியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பது தான். காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும் என்பதால் பந்து வீசும் போது சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய முடியாது. அதன் காரணமாக பல அணிகளும் டாஸ் வென்றால் கண்ணை மூடிக் கொண்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து வருகின்றன. அதில் பெரும்பாலும் அந்த அணிகள் வெற்றியும் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். முதல் பாதியில் பிட்ச் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த நிலையில் கொல்கத்தா அணி விக்கெட் வேட்டை நடத்தி டெல்லி அணியை 153 ரன்களுக்குள் சுருட்டியது. பின்னர் எளிதாக சேஸிங் செய்து வென்றது.
போட்டிக்கு பின் தனது டாஸ் முடிவு குறித்து பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது சரி தான். ஆனால், பேட்டிங்கில் நாங்கள் சரியாக ஆடவில்லை. அதனால், எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு தடுத்து ஆட போதிய ஸ்கோரை நாங்கள் கொடுக்கவில்லை என கூறி இருக்கிறார்.
இது பற்றி ரிஷப் பண்ட் பேசுகையில், "முதலில் பேட்டிங் செய்தது நல்ல தேர்வு தான். ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 150 ரன்கள் என்பது மிகவும் குறைவான ஸ்கோர். ஆனால், நாங்கள் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கிடையாது. ஒரு அணியாக கடைசி ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். 180 முதல் 210 வரை நல்ல ஸ்கோர். அந்த வகையில் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் போதிய ஸ்கோரை கொடுக்கவில்லை" என்றார்.