கொல்கத்தா : 262 ரன்கள் இலக்கு நிர்ணயித்த போது எப்படி தோல்வியடைந்தோம் என்று தெரியவில்லை என கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 262 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றது.

சிறப்பாக பேட்டிங் ஆடிய பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் 9 சிக்ஸ், 8 ஃபோர்ஸ் உட்பட 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 8 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 68 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 5 சிக்ஸ், 4 ஃபோர்ஸ் உட்பட 54 ரன்களையும் விளாசினர். டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
இதன் மூலம் கொல்கத்தா அணி 2வது முறையாக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், டி20 கிரிக்கெட்டில் முதல் பேட்டிங் செய்யும் எந்த அணியிடம் 262 ரன்களை கொடுத்தால் நிச்சயம் எடுத்து கொள்வார்கள். எங்கள் அணியில் நரைன், சால்ட் இருவரும் அட்டகாசமாக பேட்டிங் செய்தார்கள். இந்த போட்டியில் இரு அணிகளுமே சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்றே நினைக்கிறேன்.
இதுபோன்ற போட்டிகளில் தவறு எங்கு நடந்தது என்பதை உட்கார்ந்து ஆலோசித்து கண்டறிய வேண்டும். அதிலும் 260 ரன்கள் இலக்கை கூட டிஃபெண்ட் செய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த ஆடுகளத்தையும் பிட்சையும் புரிந்து கொண்டு புதிய ஐடியாவுடன் அடுத்தப் போட்டியில் களமிறங்க வேண்டும். சுனில் நரைனின் பேட்டிங் பார்க்க நன்றாக இருந்தது. இதனை அவர் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.