கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸின் பேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 2024 ஐபிஎல் தொடரில் அதிக அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அந்த அணியின் பேட்டிங் வரிசையிலேயே குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர் என்றால் அது அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் தான். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி ஆட்டம் ஆடி ஆட்டமிழந்து சென்ற பின் ஸ்ரேயாஸ் களத்துக்கு வந்தார்.

பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள், சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து இருந்த நிலையில் ஸ்ரேயாஸ் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து அணிக்கு பாதகமாக இருப்பார் என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால், 10 பந்துகளில் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ். அதாவது 280 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து கொல்கத்தா அணியிலேயே அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்த பேட்ஸ்மேனாக முத்திரை பதித்தார். சாம் கர்ரன் வீசிய 18வது ஓவரில் தொடர்ந்து நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்திருந்தார் ஸ்ரேயாஸ். அவர் ஆட்டமிழந்த பின் ரிங்கு சிங், ரமன்தீப் சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.
இத்தனை பெரிய ஸ்கோர் அடித்தும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் போட்டியின் முடிவில் சோகத்துடன் காணப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டவே முடியாத இந்த பிரம்மாண்ட இலக்கை 18.4 ஓவர்களில் எல்லாம் எட்டி வெற்றி பெற்றது. டி20 வரலாற்றில் இதுவே மிகப் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து பெற்ற வெற்றி ஆகும். நல்ல ஸ்கோர் எடுத்தும் சரியாக பந்து வீசாமல் சொதப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.