கொல்கத்தா : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை தெறிக்க விட்டார். அவருடன் சக துவக்க வீரர் பில் சால்ட்-உம் அதிரடியாக ரன் குவித்தார். இதை அடுத்து கொல்கத்தா அணி இமாலய ஸ்கோரை எடுத்தது.
துவக்கத்தில் சுனில் நரைன் கொடுத்த சில கேட்ச்களை தவற விட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, பின்னர் அவர் ஆடிய ஆட்டத்தால் அரண்டு போனது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் துவக்கம் அளித்து ஆடிய போது முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தனர்.

இதில் சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 9 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார் அவர். எப்படி பந்து வீசினாலும் சுனில் நரைன் அடித்து ஆடியதால் பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் அழுத்தத்துக்கு உள்ளானது. அத்துடன் அந்த அணி எந்த திட்டமும் இன்றி பவுண்டரியை தடுக்க வேண்டி பந்து வீச வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பந்தை ஆஃப் சைடில் வீசத் துவங்கினர்.
அதை பயன்படுத்திக் கொண்ட சுனில் நரைன் சகட்டுமேனிக்கு பவுண்டரி அடித்தார். அவர் கொடுத்த இரண்டு கேட்ச்களை தவற விட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் பின் மீளவே முடியாமல் பந்துவீச்சில் மோசமான நிலைக்கு சென்றது. 71 ரன்கள் குவித்த சுனில் நரைன் 2024 ஐபிஎல் தொடரில் 357 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். முதல் இடத்தில் 430 ரன்கள் குவித்து இருக்கும் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார்.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்த போதும் பஞ்சாப் கிங்ஸ் அணி அந்த ஸ்கோரை சேஸிங் செய்து டி20 கிரிக்கெட்டில் மாபெரும் வரலாறு படைத்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய இலக்கை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. பிரப்சிம்ரன் சிங் 54, ஜானி பேர்ஸ்டோ 108, ஷஷான்க் சிங் 68 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.