சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. கடந்த 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி கூட இடம் பெறாத ஐபிஎல் இறுதிப் போட்டியாக இது நடைபெற்றது. .
கடந்த 2014 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி இருந்தன. அதற்கு அடுத்து 2022 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி இருந்தன. அதை தொடர்ந்து தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டியில் மோதின.

இந்த மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளை தவிர்த்து 14 முறை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஐபிஎல் இறுதி போட்டியில் பங்கேற்று இருக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி உள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கிறது. அதில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆறு முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதில் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியல் கடைசியில் இடத்தில் இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போதும், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே, இந்த மூன்று அணிகளும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.