அகமதாபாத்: 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி துவக்க வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிராவிஸ் ஹெட் நேரலை ஒளிபரப்பில் பேசியிருந்தார்.
அப்போது இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் குறித்து அவர் பேசுகையில், "இந்த மைதானத்தில் எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளன. இந்த மைதானத்துக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது" என நையாண்டியாக கூறி இருந்தார்.

அவர் மறைமுகமாக 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வீழ்த்தியதை தான் குறிப்பிட்டார். இதை அடுத்து இந்திய ரசிகர்கள் கோபம் அடைந்தனர். ஐபிஎல் தொடரில் ஆடும் போது ஏன் இந்திய அணியை வீழ்த்தியதை பற்றி டிராவிஸ் ஹெட் கிண்டலாக பேச வேண்டும் என அவரை தாக்கி சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். ஆனால், அவர் போட்டியின் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது சொந்த அணியான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சிலேயே டக் அவுட் ஆகி இருந்தார்.
இதை அடுத்து தேவையே இல்லாமல் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் பேசிவிட்டு டக் அவுட் ஆகிவிட்டார் என டிராவிஸ் ஹெட்டை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. அதன் பின் ராகுல் திருப்பதி 55 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் சேர்த்தனர். எனினும் அவர்களும் ஆட்டம் இழந்ததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமான நிலைக்கு சென்றது.