லக்னோ: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆட்டமாக சன்ரைசர்ஸ் லக்னோ அணிகள் மோதிய ஆட்டம் அமைந்திருக்கிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த லக்னோ அணி 165 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் எல்லாம் விக்கெட்டுகளை இழக்காமல் வெற்றி இலக்கை எட்டி உலக சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

தற்போது லக்னோ அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கே எல் ராகுல் பேட்டிங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதனை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் நிற்க வைத்து ரசிகர்கள் முன் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கே, ராகுலை கடுமையாக திட்டினார்.
மேலும் காரசாரமாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கே எல் ராகுலை எவ்வாறு இது போல் அவமரியாதை செய்யலாம் என்று ரசிகர்களும் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். இதனால் லக்னோ அணி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் சன்ரைசஸ் அணிக்கு எதிராக அடைந்த படுதோல்வி கே எல் ராகுல் மனதில் வெகுவாக பாதித்திருக்கிறது.
மேலும் லக்னோ அணியின் உரிமையாளர் வெளிப்படையாக அனைவர் முன்னும் கே எல் ராகுலை திட்டிய சம்பவமும் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
இப்படி இருக்கும் சூழலில் தாம் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதாக ராகுல் முடிவெடுத்திருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுலின் இந்த முடிவுக்கு அணி உரிமையாளர்களும் எந்த தடையும் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ராகுலும், அடுத்த சீசனில் லக்னோ அணியை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.. லக்னோ அணி ராகுலை 17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.