சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் என்று ரசிகர்களால் அறியப்படும் கே எல் ராகுல் தாம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எப்படி வந்தேன் என்ற கதையை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அஸ்வின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், 2014 ஆம் ஆண்டு தான் நான் முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினேன்
ஆனால் 2012 ஆம் ஆண்டிலிருந்து நான் ஆர் சி பி அணியில் தான் இருந்தேன். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விராட் கோலி, பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் ஆகியோர் இருந்தார்கள். அப்போது விராட் கோலி என்னிடம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஆர் சி பி யில் விளையாட விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.

நான் என்ன விளையாடுகிறீர்களா? இது என்னுடைய கனவு அப்படி என்று கூறினேன். அதற்கு மீண்டும் பதில் அளித்த விராட் கோலி, நான் சும்மாதான் சொன்னேன்? நீ கையெழுத்து இடுகிறாயா இல்லையா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. கண்டிப்பாக நீ கையெழுத்து போட வேண்டும் என்று (செல்லமாக) மிரட்டினார். நான் கையெழுத்து போட்ட பிறகு மீண்டும் விராட் கோலி இது உனக்கு மகிழ்ச்சிகரமான பயணமாக இருக்கும் என்று கூறினார்.
இந்த இரண்டு மாதத்தில் நீ நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று கூறினார். விராட் கோலி சொன்னது போல் நான் ஆர் சி பி அணியில் அந்த இரண்டு மாதத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து கற்றுக் கொண்டேன். ஐபிஎல் தொடரில் நான் கற்றுக் கொண்டதை ஒரு சாதாரண வீரராக ரஞ்சி சீசனில் விளையாடியிருந்தால் இந்த விஷயங்களை கற்றுக் கொள்ள 7, 8 சீசன்கள் தேவைப்பட்டிருக்கும். அவ்ளோ விஷயங்களை நான் அந்த இரண்டு மாதத்தில் ஐபிஎல் தொடரில் கற்றுக் கொண்டேன்.
இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் ஆர்.சி.பி அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் எதுவுமே என் கையில் இல்லை. ஐபிஎல் தொடரில் உள்ள நல்ல விஷயங்களை அதான் நம்மால் பல அணிகளுக்கு சென்று பல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும்.என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் வருத்தமான நிகழ்வு என்றால் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை தோல்வியை தழுவியது தான்.
நான் மட்டும் பேட்டிங்கில் கடைசி வரை நின்று இருந்தால் ஒரு 30, 40 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க முடியும். இந்நேரம் உலகக் கோப்பை நமது கையில் இருந்திருக்கும். நிச்சயமாக எனக்கு அந்த நிகழ்வு இன்னும் மன வருத்தத்தை தருகிறது. ரோகித் சர்மாவும், டிராவிடும் அணியில் ஒரு அமைதியான சூழலையும் உருவாக்கினார்கள். எந்த வீரர்களுக்கு என்ன பொறுப்பு என்பதை முன்கூட்டியே விலக்கியதால் எனக்கு அது திருப்திகரமாக இருந்தது என்று ராகுல் கூறினார்.