ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே இன்று ரசிகர்களுக்கு ஒரு மிக சிறப்பான நாள். ரொம்ப நாள் கழித்து ஒரு ஃபுல் மீல்ஸ், மட்டன் பிரியாணி என ஒரு பெரிய விருந்தே ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
பொதுவாக இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு பெரிய அளவில் எடுக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த சீசனில் மிகவும் அடி வாங்குகிறார்கள். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்கள்.

இன்றைய ஆட்டத்தில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. மொத்தமாக அந்த அணி வீரர்கள் 18 சிக்சர்களையும், 19 பவுண்டரிகளையும் விளாசி இருந்தனர். இதே போன்று 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் அபாரமாக விளையாடினாலும் அவர்களால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 20 சிக்ஸர்களும் 12 பவுண்டர்களும் அடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டியில் பல சாதனைகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலே ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் எடுத்திருப்பது இதுதான் முதல் முறையாகும். இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 523 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.
இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் நான்கு வீரர்கள் அதிவேகமாக அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளிலும், ட்ராவிஸ் ஹெட் 18 பந்துகளிலும், ஹென்றிச் கிளாசன் 23 பந்துகளிலும் திலக் வர்மா 24 பந்துகளிலும் அரை சதம் அடித்திருக்கிறார்கள்.இதே போல் ஐபிஎல் வரலாற்றிலே ஒரு அணி எடுத்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்து இருக்கிறது.
இதற்கு முன்பு ஆர்சிபி அணி 263 ரன்கள் குவித்தது சாதனையாக கருதப்பட்டது. இதேபோன்று ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்து இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரு ஐபிஎல் தொடரில் 38 சிக்ஸர்கள் விளாசி, அதிக சிக்சர் அடித்த போட்டி என்ற சாதனையை இந்த போட்டி படைத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் டி20 வரலாற்றிலே ஒரு போட்டியில் அதிக சிக்சர் , இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் என்ற சாதனையும் இன்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்டிருக்கிறது.