லக்னோ : ஐபிஎல் தொடரின் தாரக மந்திரமே வாய்ப்பு திறமையும் ஒன்றிணையும் இடம் என்பதுதான். அப்படி இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி ஒரே இரவில் ஒபாமா அளவுக்கு மாறிய இந்திய பவுலர் மாயங் யாதவ் தற்போது காயம் அடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோ அணியின் இடம்பெற்று இருந்த மாயங் யாதவ் திடீரென்று 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தை ஆளாக்கினார். வேகம் மட்டுமில்லாமல் விவேகமும் அவருடைய பந்து வீச்சில் இருந்ததுதான் கிரிக்கெட் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்தது.

பல வீரர்கள் வேகமாக பந்து வீசினாலும் பந்தை சரியாக கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவார்கள். ஆனால் மாயங் யாதவ் தாம் வீசிய வேகத்தை அருமையாக கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மாயங் யாதவ், இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது.நடப்பு சீசனில் அவர் மூன்று போட்டிகளில் தான் விளையாடினார்.
அதில் பஞ்சாப் அணிக்கு எதிராக தாம் களமிறங்கிய முதல் போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் ஆர் சி பி அணிக்கு எதிராக 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் மாயங் வீழ்த்தினார். இந்த நிலையில் குஜராத்துக்கு எதிரான தன்னுடைய மூன்றாம் லீக் ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய நிலையில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து போட்டியிலிருந்து பாதியில் விலகினார்.
தற்போது மாயங் யாதவுக்கு இடுப்பு பகுதியில் லேசான வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மாயங் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிவேகமாக பந்து வீசினாலும் அவருக்கு சிறுவயதிலிருந்து காயம் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. மேலும் அவர் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இந்திய வீரர்கள் அசைவ உணவை எடுத்து கொள்வதால் தான், அவர்களால் தற்போது உலகத்தர வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்க முடிகிறது என்று பாகிஸ்தான் ஜாம்பவான் சையது ஆப்ரிடி குறிப்பிட்டு இருந்தார். இதை எல்லாம் மேற்கொள்காட்டி, மாயங் யாதவால் தொடர்ந்து காயமின்றி பந்து வீசுவது சிரமம் என்று நமது செய்தி தளத்தில் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது அதே மாதிரி மாயங் யாதவ் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், அவருடைய உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மாயங் யாதவை நம்பி டி20 உலக கோப்பை,ஆஸ்திரேலிய தொடரில் மாயங் யாதவை அழைத்துச் செல்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது.