ஐதராபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனை லக்னோ அணி நிர்ணயித்த 166 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக துரத்தி உலக சாதனை படைத்தது. இது லக்னோ அணி உரிமையாளர்களை கோபமடைய செய்திருக்கிறது.
போட்டி முடிவடைந்த உடன் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலை அழைத்து அணி உரிமையாளர் கோயங்கா, கண்டபடி பேசி கத்திய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னால் தொலைக்காட்சி நேரலையில் ராகுலிடம் லக்னோ உரிமையாளர் நடந்து கொண்ட விதம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் லக்னோ அணி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கே.எல். ராகுல் போன்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஹீரோக்களுக்கு இவ்வாறு நடப்பது சரி கிடையாது என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மோயின் அலியின் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில் மோயின் அலி பேசிய விஷயம் குறித்து தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவில் தாம் சிஎஸ்கே அணிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகுவதாகவும், இந்த மூன்றாவது ஆண்டில் தான் சிஎஸ்கே அணியின் உரிமையாளரை நான் சந்தித்தேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணியில் எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் அதை குறித்து அவர்கள் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். இந்த சீசன் சரியாக விளையாடவில்லையா, அடுத்த சீசனில் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவார்கள்.சிஎஸ்கே அணி ஏன் இவ்வளவு வெற்றிகளை பெற்று வருகிறது என்று இங்கு வந்து பிறகு தான் எனக்கு தெரிகிறது.
சிஎஸ்கே அணி உரிமையாளர்களால் எங்களுக்கு துளியும் கூட எந்த நெருக்கடியும் ஏற்பட்டது இல்லை. சிஎஸ்கேயின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் எங்களை ஒரு குடும்பமாக பார்த்துக் கொள்வார் என்று மோயின் அலி கூறினார். மோயின் அலி, கடந்த ஆண்டு இந்த கருத்தை தெரிவித்து இருந்தார். தற்போது ரசிகர்கள் அதனை பகிர்ந்து சிஎஸ்கே அணியை பார்த்து லக்னோ அணி உரிமையாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.