டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நடந்து கொண்ட விதம் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தனது அணி மோசமாக தோல்வி அடைந்ததால் கேப்டன் கே எல் ராகுலை மைதானத்திலேயே வைத்து கடுமையாக பேசியிருந்தார்.

அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதாக வெடித்தது. சஞ்சீவ் கோயங்கா செய்தது தவறு என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சனம் செய்தனர். கே எல் ராகுல் லக்னோ அணியை விட்டு விலக வேண்டும் எனவும், அவர் விரைவில் விலகி விடுவார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சீவ் கோயங்காவின் செயல்கள் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தின. இந்த போட்டிக்கு முன் கேப்டன் கே எல் ராகுலை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தார். அடுத்து போட்டி நடந்த போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த சஞ்சீவ் கோயங்கா ராகுல் பிடித்த கேட்ச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினார்.
லக்னோ அணியின் ஒவ்வொரு சிறப்பான செயல்பாடுகளுக்கும் அவர் சிரித்த முகத்துடன் கைதட்டி வரவேற்றார். ஆனால் இந்தப் போட்டியில் லக்னோ அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இந்த மோசமான சூழ்நிலையிலும், போட்டியில் தோல்வி அடைந்த போதும் சஞ்சீவ் கோயங்கா போட்டி முடிந்தவுடன் சிரித்த முகத்துடன் கே எல் ராகுலுடன் பேசிக் கொண்டிருந்தார். இதை சுட்டிக் காட்டிய கே எல் ராகுல் ரசிகர்கள் சிலர் "இதுதான் ராகுலின் பவர்" எனக் கூறி சிலாகித்தனர். மறுபுறம் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த காட்சிகளை சுட்டிக்காட்டி சஞ்சீவ் கோயங்கா தன் மீதான விமர்சனத்தை துடைப்பதற்காகவே இதுபோல செயல்படுகிறார் என கூறுகின்றனர்.