சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அபார இன்னிங்ஸ் ஆடி இருக்கிறார். நவீன யுவராஜ் போல் விளையாடும் சிவம் துபே சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக இருக்கிறார்.
அனைத்து அணியும் நடு ஓவர்களில் தான் ரன்கள் குவிக்கும் வேகத்தை குறைக்கும். ஆனால் சிவம் துபே சிஎஸ்கே அணியில் இருப்பதால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக இருக்கிறார்.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. அப்போது சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும் மற்ற வீரர்கள் தடுமாறினர். இதனால் 9 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் தான் எடுத்தது.அதன்பிறகு களத்திற்கு வந்த சிவம் துபே பட்டையை கிளப்பினார்.
சிக்ஸர் அடிப்பதை அல்வா சாப்பிடுவது போல் ஒரு பழக்கமாக வைத்திருக்கும் சிவம் துபே லக்னோ அணியின் பந்துவீச்சை விரட்டி அடித்தார். குறிப்பாக லக்னோ வீரர்களின் வேகப்பந்து வீச்சை பளார்! பளார் என்று அவர் சிக்சர் அடிக்க பந்துகள் அனைத்தும் பார்வையாளர்கள் மாடத்தில் விழுந்தது. சிவம் துபே அதிரடி ஆட்டத்தால் 22 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 27 பந்துகளில் 66- ரன்கள் குவித்தார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். சிவம் துபே இன்றைய ஆட்டத்தில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎலில் இருந்து ரன்கள் எடுத்துக் கொண்டால் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை சிவம் துபே படைத்திருக்கிறார்.
சிவம் துபேவின் இந்த அதிரடி ஆட்டத்தை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த தோனி கைதட்டி வரவேற்றார். ருதுராஜ் தன் பங்கிற்கு சதம் அடிக்க சிவம் துபேவும் பட்டையை கிளப்பி நான்காவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது.