லக்னோ : 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ரமன்தீப் சிங் வெறும் 6 பந்துகள் மட்டுமே சந்தித்து 417 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார்.
ஏற்கனவே கொல்கத்தா அணி 200 ரண்களைக் கடந்து இருந்த நிலையில் ரமன்தீப் சிங் அதிரடியால் அந்த அணி லக்னோ அணியால் எட்ட முடியாத இலக்கை நிர்ணயித்தது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் 14 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். மற்றொரு துவக்க வீரரான சுனில் நரைன் வழக்கம் போல தன் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியை கதிகலங்க வைத்தார். அவர் 39 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். 6 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தார். மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த ரகுவன்ஷி 26 பந்துகளில் 32 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 12 ரன்களையும், ரிங்கு சிங் 16 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்த நிலையில் 19வது ஓவரில் களமிறங்கிய ரமன்தீப் சிங் அதிரடி ஆட்டம் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மறுபுறம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் ஆடி 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 19 மற்றும் 20ஆவது ஓவரில் அதிரடியாக நான்கு பவுண்டரிகள் அடித்தார். 19வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த அவர், 20வது ஓவரில் ஒரு போர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார்.
இதை அடுத்து வெறும் 6 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 417 ஆக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் குவித்து இருந்தது. இந்த போட்டி நடந்த ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இதுவே மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். இந்த ஸ்கோரை சேசிங் செய்வது மிக மிக கடினமான காரியம் என்பதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் ரமன்தீப் சிங் பவுண்டரிகளை அடித்தபோது முகம் வெளிறிப் போய் காணப்பட்டார். பின்னர் இந்தப் போட்டியில் லக்னோ அணி மோசமாக சேஸிங் செய்து படுதோல்வி அடைந்தது.