லக்னோ : லக்னோ அணி வீரர் ஆயுஷ் பதோனி ரன் அவுட் ஆவதை தவிர்க்க கிரீஸை நோக்கி பாய்ந்தார். பாதி பேட் கிரீஸை தாண்டி சென்றது. ஆனால், அவரது பேட் காற்றில் இருந்ததாகக் கூறி மூன்றாவது அம்பயர் தீர்ப்பு அளித்தார்.
இந்த முடிவு அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் அம்பயரை மும்பை இந்தியன்ஸ் அணி விலை கொடுத்து வாங்கி விட்டதாக விளாசி வருகின்றனர். எனினும், இந்தப் போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது. என்ன நடந்தது?

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக ஆடி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த மும்பை அணி பின்னர் இஷான் கிஷன் 32, நேஹால் வதேரா 46, டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்ததால் 144 ரன்கள் வரை சேர்த்தது.
அடுத்து லக்னோ அணி சேஸிங் செய்த போது 14.5 ஓவரில் 115 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து முக்கிய கட்டத்தில் இருந்தது. அதுவரை சிறப்பாக பேட்டிங் செய்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு முன்னதாக கே எல் ராகுல் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து இருந்தனர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆஷ்டன் டர்னர் 5 ரன்கள் எடுத்து பவுல்டு அவுட் ஆனார். அடுத்து ஆயுஷ் பதோனி வந்தார். 12 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன் ஓடினார்.
இரண்டாவது ரன் ஓடி முடித்த போது மும்பை அணியின் ஃபீல்டர் நமன் திர் பந்தை விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் எறிந்தார். அப்போது ரன் அவுட் ஆவதை தவிர்க்க ஆயுஷ் பதோனி கிரீஸை நோக்கி பாய்ந்தார். அவர் கீழே விழுந்த போது பாதி பேட் கிரீஸை தாண்டி சென்றது. அதே சமயம் இஷான் கிஷன் ரன் அவுட் செய்தார்.
அம்பயர் அதை ரீப்ளே செய்து பார்த்த போது ஆயுஷ் பதோனியின் பேட் காற்றில் இருந்ததாக கருதிய மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். அதைக் கண்டு ஆயுஷ் பதோனி அதிர்ந்து போனார். ஆடுகளத்தை விட்டு வெளியேறாமல் நின்றார். பின்னர் களத்தில் இருந்த அம்பயர் அவருக்கு விளக்கம் அளித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நொடியே சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அம்பயரை வாங்கி விட்டதாக விமர்சனம் எழுந்தது.