லக்னோ : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா 2024 ஐபிஎல் தொடரில் படுமோசமாக ஆடி வருவதை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன் ஃபார்மை நிரூபித்து, இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் நியாயமாக நடந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.

இதை அடுத்து இந்திய அணியின் துணை கேப்டனாக மட்டுமல்ல, இந்திய அணியிலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் அளித்து இருக்கக் கூடாது என ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியாவை அணியில் வைத்துக் கொண்டு இந்திய அணியால் உலகக்கோப்பை வெல்ல முடியாது. அதை மறந்து விட வேண்டியது தான் என சிலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணி இழக்கும் என்ற நிலையில் அந்த அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 10, திலக் வர்மா 7 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி 5.1 ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். பெரிய இன்னிங்க்ஸ் ஆடி அணியைக் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் நவீன் உல் ஹக் ஆஃப் சைடு வீசிய பந்தை அடித்து ஆட முயன்று எட்ஜ் செய்தார். விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் பந்தை எளிதாக கேட்ச் செய்தார்.
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. அதன் பின் திலக் வர்மா ரன் குவித்து மும்பை அணியின் அணியை கரை சேர்த்தார்.