மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு தொடருக்கு முன் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் சொதப்பி இருக்கிறார். அணித் தேர்வு, பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது, ஃபீல்டிங் நிறுத்துவது, கடைசி ஓவர்களில் எதிரணியை ரன் குவிக்க விடாமல் செய்வது என பலவற்றிலும் கேப்டனாக அவர் சரியாக செயல்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பத்து ஆண்டுகள் அணியை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதவியை உதறி விட்டு தங்கள் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.

ஆனால், ஹர்திக் பாண்டியாவால் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் மோசமான நிலைக்கு சென்று இருக்கிறது. 2024 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இனி அந்த அணி மீதமுள்ள ஐந்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம் தான்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பே மீட்க வேண்டும் என்றால் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி பார்த்தால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மற்ற வீரர்கள் அனைவரையும் நீக்கி விட்டு ஏலத்தில் புதிய வீரர்களை வாங்க வேண்டும்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருப்பதால் இப்போதே 2025 ஐபிஎல் தொடருக்கு திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக மோசமாக செயல்பட்டு இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆடுவது சரியான முடிவாக இருக்குமா? என்பதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்.
அதே போல, ரோஹித் சர்மாவை 2025 ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமித்தால் தங்கள் அணிக்கு சாதகமாக இருக்குமா? என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட இருக்கும் நிலையில் அவரை இன்னும் ஓராண்டுக்கு கேப்டனாக நியமிக்கலாம். அந்த முடிவை எடுத்தால் இப்போதே ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ரோஹித் சர்மா தலைமையில் மீதமுள்ள ஐந்து போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணி சந்திக்க வேண்டும்.