சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் லக்னோ அணிக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் லக்னோ நிர்ணயித்த இலக்கை சன்ரைசர்ஸ் அணி பத்து ஓவர் முடிவதற்குள் விக்கெட் இழப்பின்றி எட்டி உலக சாதனையை படைத்தது.
இதனால் கடுப்பான அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து கோபமாக திட்டினார். மேலும் லக்னோ அணி மோசமாக செயல்பட்டதாக கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கே எல் ராகுல் போன்ற ஒரு நட்சத்திர வீரரை அணி உரிமையாளர் எப்படி ரசிகர்கள் முன் திட்டலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், அணி உரிமையாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்றும் குற்றச்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் அணி உரிமையாளர் மீது கே.எல். ராகுல் வருத்தத்தில் இருப்பதாகவும், இதனால் லக்னோவுக்கு எஞ்சியுள்ள போட்டியில் தாம் பங்கேற்க மாட்டேன் என்று கே எல் ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.
இதனால் இன்று டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் ரசிகர்களும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்மாவை கடுமையாக சாடி வந்தனர். இதனால் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே எல் ராகுலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருக்கிறார்.
உரிமையாளரின் அழைப்பை ஏற்று ராகுலும் விருந்துக்கு சென்று இருக்கிறார்.அப்போது சஞ்சீவ் கோயங்கா, கே எல் ராகுலை கட்டி அணைத்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். மேலும் இது போன்ற தவறுகள் இனி நடைபெறாது என்றும் அணியில் என்ன நடக்கிறது என்பதில் தான் இனி தலையிட மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
முழு சுதந்திரம் கேப்டனுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர் இனி தம் தலையிட போவதில்லை என்றும் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அணி உரிமையாளரின் இந்த செயலால் கே எல் ராகுல் தற்போது மனம் இறங்கி வந்திருக்கிறார். இதனால் கேஎல் ராகுல் லக்னோ அணியை விட்டு விலக மாட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.