லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடைபெற்ற 21 வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தினர். ஐபிஎல் வரலாற்றில் புதிய அணிகளாக களம் இறங்கிய இவர்களில் குஜராத்துக்கு எதிராக லக்னோ ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை.
இந்த வரலாற்றை மாற்றும் உத்வேகத்தில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி இந்த ஆட்டத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆடுகளும் மிகவும் தோய்வாக இருந்ததால் பேட்டிற்கு பந்து வரவே இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மிகவும் தடுமாறினார்கள். அதிரடி வீரர் குயிண்டன் டிகாக் ஒரு சிக்சர் மட்டுமே எடுத்து 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதேபோன்று டேவிட் படிக்கல்லும் 7 ரன்களில் வெளியேற கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து நீக்க முயற்சி செய்தனர்.
கே எல் ராகுல் 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 33 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு அளவுக்கு அதிரடியாக ஆடி நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிக்கோலஸ் பூரான் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்தில் 32 ரன்கள் சேர்க்க ஆயுஸ் பதூனி 11 பந்துகளின் 20 ரன்கள் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 163-ரன்கள் என்ற கௌரவ இலக்கை எட்டியது. இதனை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். எனினும் கில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அவர் 21 பந்துகளை எடுத்துக்கொண்டு வெறும் 19 ரன்கள் தான் சேர்த்தார்.
இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும், பி.ஆர். சரத் 2 ரன்களிலும், விஜய் சங்கர் 17 ரன்களிலும்,தர்ஷன் நால்காண்டே 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க குஜராத் அணி சரிவை நோக்கி சென்றது. ராகுல் திவாட்டியா மட்டும் தனியாளாக நின்று போராடினார். எனினும் அவருக்கு யாருமே துணை நிற்கவில்லை. பின்வரிசை வீரர்கள் ரஷீத் கான் உள்ளிட்டோர் வந்த வேகத்தில் வெளியேறினார்.
இதனால் குஜராத் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ராகுல் திவாட்டியா 25 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார். லக்னோ பந்துவீச்சு தரப்பில் யாஷ் தாக்கூர் அபாரமாக பந்து வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் லக்னோ அணிக்காக தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் களமிறங்கி அபாரமாக செயல்பட்டார். அவர் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் நான்கு ஓவருக்கு 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். எனினும் குர்னல் பாண்டியா நான்கு ஓவருக்கு 11 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்தினார்.