மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே சொந்த நாட்டு வீரரை இந்திய ரசிகர்கள் திட்டி எதிர்க்கும் சம்பவம் முதல் முறையாக தற்போது ஐபிஎல் தொடரில் நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவானாக விளங்கி வந்த ரோகித் சர்மாவுக்கு ஆப்பு வைத்துவிட்டு அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்தது தான் என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமக்கு என ஒரு அணியை உருவாக்கி அதில் கேப்டனாக இருந்து முதல் சீசனில் ஐபிஎல் கோப்பை, இரண்டாவது சீசனில் இறுதி போட்டி என சிறப்பாக இருந்தார். ஆனால் சனி அவருடைய தலையில் டான்ஸ் ஆடினால் யாரால் தான் தடுக்க முடியும். தேவையில்லாமல் குஜராத் அணியை கை கழுவி விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து தற்போது கேப்டனாக இருந்தும் எந்த ஒரு பெருமையையும் அனுபவிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
ஹர்திக் பாண்டியா எங்கு சென்றாலும் ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி ரோஹித்! ரோஹித்! என கத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இதேபோல் ரசிகர்கள் ரோகித்! ரோகித் என்று கத்தி வந்தனர். ஆட்டத்தின் இடைவேளையின் போது, அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானியும் ஹர்திக் பாண்டியாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஹர்திக் பாண்டியா மீண்டும் டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி ஓடினார். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் ரோகித்! ரோகித் என கத்தினார்கள். இதனால் கடுப்பான ஹர்திக் பாண்டியா, அங்கிருந்த தடுப்புகளை ஓங்கி அடித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியாவிடம் ரோஹித் ரோஹித் என கத்துவதால் அவர் கடுப்பின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார் என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக விளையாடாததால் அணி நிர்வாகமும் அவருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது. இந்த வீடியோவில் ரசிகர்கள் ரோஹித் என கத்தியதால் இவ்வாறு செய்தாரா இல்லை அம்பானி மீதான கோபத்தில் ஏதேனும் இப்படி செய்தாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.