கொல்கத்தா : மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ரோஹித் சர்மா பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவால் மிகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நீக்கப்பட்டார். அதன் பின் அந்த அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த கேப்டன்சி மாற்றத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோ ஒன்றை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது.
அந்த வீடியோவில் ரோஹித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் "நாய்ஸ் கேன்சலேஷன்" (Noise Cancellation) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த வீடியோவில் பின்னணியில் இருந்த இரைச்சலை நீக்கிவிட்டு ரோஹித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரிய வந்தது.
அப்போது அவர், "இங்கு ஒவ்வொரு விஷயமும் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் இந்த அணியை கட்டமைத்தேன். இதுதான் எனது வீடு. கோவிலை போல அந்த அணியை மாற்றினேன்." என்று கூறுகிறார். அதன் பின், "இதுதான் எனது கடைசி" என்ற கூறுகிறார். அந்த கடைசி வாக்கியம் தெளிவாக கேட்கவில்லை.
இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி விடுவார் என ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், இதன் மூலம் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சர்ச்சை வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியிட்ட சில நிமிடங்களில் நீக்கி விட்டது. இதனால் ஐபிஎல் அரங்கில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.