டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மோசமாக நடந்து கொண்டார். தன் அணியின் ஃபீல்டர்களை பார்த்து சண்டை போடுவது போல ஆக்ரோஷமாக கத்தினார். அது மட்டுமின்றி அம்பயருடன் கடும் வாக்குவாதம் செய்தார்.
2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஆனால், ஹர்திக் பாண்டியா எடுத்த டாஸ் முடிவு தவறாக சென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி தாறுமாறாக ரன் குவித்தது. குறிப்பாக துவக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கிர்க் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபாய மணி அடித்தார். அவர் 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த பின் போட்டி தங்கள் கட்டுக்குள் வரும் என ஹர்திக் பாண்டியா நினைத்தார். ஆனால், அடுத்து வந்த டெல்லி பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினர். இதை அடுத்து பொறுமை இழந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் ஃபீல்டர்கள் தவறு செய்த போது ஆக்ரோஷமாக திட்டினார். அடுத்து அம்பயர் வைடு கொடுத்த போது அவருடன் மல்லுக்கு நின்று கடும் வாக்குவாதம் செய்தார்.
இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் கூட சேர்க்கக் கூடாது என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். ஒரு கேப்டன் பொறுப்பில் இருப்பவர் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணி கேப்டன்களாக செயல்படும் போது பல முறை கோபம் கொண்டுள்ளனர். ஆனால், யாரும் சக வீரர்களை பொது வெளியில் வைத்து கோபத்தை கொட்டி திட்டியதில்லை.
அந்த வகையில் அடுத்த இந்திய டி20 அணி கேப்டன் என்றெல்லாம் சொல்லப்படும் ஹர்திக் பாண்டியா களத்தில் தன் அணி வீரர்களையே திட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.