மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய போது ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரராக மட்டுமே அணியில் இடம் பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசியபோது அவர் ஆடுகளத்தில் ஃபீல்டிங் செய்யவில்லை. இம்பாக்ட் வீரராக பேட்டிங் மட்டுமே செய்தார்.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வட்டாரத்தில் இருந்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா சரியாக கேப்டன்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி அடைந்து வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆதிக்கம் வீரர்களிடையே இருப்பது தான் எனக் கருதியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஆடுகளத்தில் இருக்கும் போது மற்ற வீரர்கள் அவர் சொல்வதையே கேட்கின்றனர் எனவும், பல சமயம் ரோஹித் சர்மாவே ஃபில்டிங் நிறுத்தியதையும் ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர் இல்லாமல் தாமாகவே அணியை முழுமையாக வழிநடத்தினால் தன்னால் கேப்டனாக வெற்றிகளை குவிக்க முடியும் என ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து ரோஹித் சர்மாவை இம்பாக்ட் வீரராக மாற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஹர்திக் பாண்டியா கேட்டது போல ரோஹித் சர்மாவை பந்துவீச்சின் போது வெளியே உட்கார வைத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவில்லை. இதை அடுத்து ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குறித்து அணி நிர்வாகம் மேலும் அதிருப்தி அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசிய போது ஹர்திக் பாண்டியா பெரிய தவறு ஒன்றை செய்தார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணியை 57 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற அளவுக்கு சுருக்கிய பின், பும்ரா மற்றும் கோட்ஸி ஆகிய விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல், நமன் திர்-ஐ பந்து வீச அழைத்தார். மேலும் தானும் சில ஓவர்கள் வீசினார்.
அது கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமைந்தது. ஐந்து விக்கெட்களை இழந்த பின்னும் கொல்கத்தா அணி ரன் குவித்து 19.5 ஓவர்களில் 169 ரன்களை சேர்த்தது. இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சின் போது மற்ற பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பை அணி 145 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி 24 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. ரோஹித் சர்மாவை விலக்கி வைக்க வேண்டும் என்ற ஹர்திக் பாண்டியாவின் கோரிக்கையை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஏற்றும், ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் சரியாக செயல்படவில்லை. இதை சுட்டிக்காட்டி ரோஹித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.