மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது சர்ச்சை வெடித்தது.
2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸில் ஏமாற்று வேலை செய்ததாக முன்பே ஒரு முறை சர்ச்சை எழுந்தது. அதனை எடுத்து ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என டாஸ் போட்ட பின் கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதன் மூலம் டாஸ் சர்ச்சையை தவிர்த்தது தொடரை நடத்தும் பிசிசிஐ.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காசை சுண்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் டெயில்ஸ் என கேட்டார். ஆனால் மேட்ச் ரெப்ரீ கீழே விழுந்த காசை உடனடியாக கையில் எடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா டாஸில் வென்றதாக அறிவித்தார்.
மற்ற போட்டிகளில் எல்லாம் டாஸுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்ட வில்லை. இதை அடுத்து சமூக வலை தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாஸில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று விட்டதாக கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
ஒருவேளை உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி டாஸில் வென்றிருக்கலாம். ஆனால், மேட்ச் ரெப்ரீ அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்து விட்டார் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு மேட்ச் ரெப்ரீ தவறு செய்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் டாஸில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயா டாஸில் என்ன விழுந்தது என மேட்ச் ரெப்ரீயிடம் மீண்டும் ஒருமுறை கேட்டார். அதன் மூலம் அவருக்கும் டாஸ் வெற்றியில் சந்தேகம் இருப்பது தெரிகிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் டாஸ் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
டாஸில் வென்றதாக அறிவிக்கப்பட்ட உடன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன் குவிக்கத் திணறியதோடு, 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது.