மும்பை : 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் அதன் ரசிகர்களை உறைந்து போக வைத்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்று மிக மோசமான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமாக விளையாடியது.

லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 214 ரன்கள் குவித்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. தங்களின் கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி கூட பெற முடியாத சோகத்துடன் மும்பை அணி இருந்தது.
இந்த நிலையில்தான், மும்பை இந்தியன்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பதால் ஐபிஎல் விதிப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தண்டனை அளித்து இருக்கிறது பிசிசிஐ. அதன்படி அவரது அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு முறை இதே போல குறிப்பிட்ட நேரத்திற்குள் மும்பை இந்தியன்ஸ் அணி ஓவர்களை வீசி முடிக்கவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த தவறை முதல் முறை செய்த போது 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது முறை 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக அதே தவறு நடந்துள்ளதால் ஐபிஎல் விதிப்படி ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி முடித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறவில்லை. அடுத்து 2025 ஐபிஎல் தொடரில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட முடியும். எனவே, 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் முதல் லீக் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தடை செயல்படுத்தப்படும். அந்தப் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும்.