மும்பை : 2024 ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 2024 ஐபிஎல் தொடரில் இதுவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் போட்டி ஆகும்.
பத்து ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து, ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மா அந்த அணியை விட்டு விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி போட்டி என கூறப்பட்டது.

இந்த நிலையில் ரோஹித் சர்மா இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக மட்டுமே இருந்தார். முதலில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீசியது. லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இடையே ரோஹித் சர்மா மாற்று வீரராக ஃபீல்டிங் செய்ய மட்டுமே வந்தார்.
அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சேஸிங்கின் போது ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வருவாரா? இல்லையா? அவருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு விட்டதா? என்ற சந்தேகத்துடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் ரோஹித் சர்மா துவக்க வீரராக களம் இறங்கினார். கடந்த சில போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனத்தை சந்தித்த ரோஹித் சர்மா, இந்த போட்டியில் அதிரடியாக ரன் குவித்தார். 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து லக்னோ அணியை திணற வைத்தார். 10 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.
அவரைத் தவிர்த்து மும்பை அணியின் நமன் திர் மட்டுமே சிறப்பாக ரன் குவித்து இருந்தார். அவர் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். எனினும் மற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்காததாலும், விரைவாக விக்கெட்களை இழந்ததாலும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது, ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது கடைசிப் போட்டி என்பதோடு, அவரது சொந்த ஊரான மும்பையின் வான்கடே மைதானத்தில் அவர் மும்பை அணிக்காக கடைசிப் போட்டியை ஆடி இருந்தார். அதைக் குறிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினர். இந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.