மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு லீக் சுற்றில் கடைசி மூன்று போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் அவர் உலகக்கோப்பை தொடருக்கு முழு அளவில் தயாராவார் எனவும் பலரும் கூறி வந்தனர்.

வேகப் பந்துவீச்சாளர்கள் போதிய ஓய்வின்றி நீண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றால் அவர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதை கருத்தில் கொண்டு நீண்ட கிரிக்கெட் தொடர்களின் இடையே வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். தற்போது ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளை ஆடிவிட்டு, அடுத்து டி20 உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றால் வேகப் பந்துவீச்சாளர்கள் சோர்ந்து போக வாய்ப்பு உள்ளது. மேலும், காயம் ஏற்படவும் வாய்ப்பு அதிகரிக்கும்.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி இருக்கும் பும்ரா அந்த அணிக்கு மீதமுள்ள 3 போட்டிகளில் ஆடினாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது. எனவே, பும்ராவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தாமாக முன்வந்து ஓய்வளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இடம் பெற்றார். இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பை வெல்ல வேண்டும், அதற்கு பும்ரா முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதேசமயம் வேறு சில ரசிகர்கள் ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு வீரருக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கின்றன. எனவே அந்த அணிகளுக்கு எந்த வீரருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என கூறி வருகின்றனர்.