மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்துள்ளது. இந்தப் போட்டியின் முடிவால் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் நெட் ரன் ரேட் அடிப்படையில் நான்காம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மோசமான செயல்பாட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்ற நிலை இருந்தது. அது நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு அது மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.
ஆனால் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 17.2 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை தனியாக வெற்றி பெற வைத்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்தப் போட்டியின் தோல்வியால் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளும் 11 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கின்றன. எனினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (நெட் ரன் ரேட் - 0.700) மூன்றாவது இடத்திலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (நெட் ரன் ரேட் - -0.065) நான்காவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (நெட் ரன் ரேட் - -0.371) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் நிலையில் உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் மட்டுமே முன்னேற முடியும் எனும் நிலையில் அடுத்த இரண்டு இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னா சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மூன்று அணிகளில் இரண்டு அணிகள் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.