மும்பை : ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய அத்தியாயத்தை குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியா உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் இரண்டு சீசனில் கம்பி நீட்டிவிட்டார். இந்த நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சமி ஹர்திக் பாண்டியா சென்றது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்..

அதில், இதோ பாருங்கள்! யார் அணியை விட்டு சென்றாலும் எந்த கவலையும் இல்லை . அணியின் பேலன்ஸ் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் தான் அனைவரும் பார்ப்பார்கள். ஹர்திக் பாண்டியா இருந்தபோது அவர் எங்கள் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். இரண்டு சீசன்களிலும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். அதில் ஒரு முறை நாங்கள் கோப்பையை வென்று இருக்கிறோம்.
ஹர்திக் பாண்டியாவை அவர் வாழ்க்கை முழுவதும் குஜராத் அணிக்காக விளையாட வைக்க ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை. ஒரு அணியில் இருக்க வேண்டுமா இல்லை செல்ல வேண்டுமா என்பது குறித்து ஹர்திக் பாண்டியா தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது வரும் ஐபிஎல் சீசனில் கில்லும் நல்ல அனுபவத்தை பெறுவார். ஒருநாள் அவரும் அணியை விட்டு விலகி செல்வார். இது போட்டியில் உள்ள ஒரு பகுதி. வீரர்கள் வருவார்கள், செல்வார்கள் நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கான பொறுப்பை நீங்கள் சரியாக கையாள வேண்டும்.
உங்களுடைய செயல்பாடு நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் மனதிலும் பல சுமைகள் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட கூடாது. ஒரு கேப்டனாக வீரர்களை சரியான முறையில் கையாள வேண்டும். ஒரு வீரிடமிருந்து சிறந்த செயல்பாட்டை கேப்டன் தான் வெளியே கொண்டு வர வேண்டும் என்று சமி கூறியுள்ளார்.