மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேப்டன் பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தோனி தற்போது இளம் வீரர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு அணியிலும் அடுத்த கேப்டனாக யார் வரப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய அரசியலாக விளையாட்டில் இருக்கிறது. ஒரு சிலர் தமக்கு சரியான மரியாதையை அணி கொடுக்கவில்லை என்று வெளியேறுகிறார்கள்.

ஒரு சிலர் கேப்டன் பதவி தமக்கு தான் வர வேண்டும் என போர் கொடி தூக்குகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நீண்ட காலம் இருந்து வருகிறார். இடையில் ஜடேஜாவும் தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என கூறியதால் அவருக்கு விட்டுக் கொடுத்த தோனி, பின்னர் அவர் சரியாக செயல்படாததால் மீண்டும் கேப்டனாக வந்தார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் தலைமை பதவியில் இருப்பவர்கள். மரியாதையை சம்பாதிப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள தோனி மரியாதை என்பது நமது பதவிக்காக வரும் விஷயமல்ல. நமது செயல்பாடுகளால் மட்டுமே அது கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதாவது கேப்டன் பதவியில் இருந்தால்தான் கெத்து என்று தற்போதைய தலைமுறையினர் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் களத்தில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் அணிக்காக எவ்வாறு விளையாடுகிறீர்கள் என்பதால் மட்டுமே மரியாதை வருமே தவிர கேப்டன் பதவியால் இருக்காது என்று கூறியிருக்கிறார்.
தோனியின் இந்த கருத்து தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தோனியின் இந்த அறிவுரையை பார்த்தாவது இனிவரும் கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் பதவிக்காக அடித்துக் கொள்ளாமல் சுயநலம் இன்றி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் மரியாதையை தேடி போகாமல் செயலில் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தோனியின் இந்த பேட்டியை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளனர்.