சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடிய முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியை தோற்கடித்து அசத்தி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியை வரும் செவ்வாய்க்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டிக்கு மூன்று நாட்கள் இடைவெளி இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சிஎஸ்கே வீரர்கள் தற்போது தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிகவும் போதாத காலமாக இருக்கிறது.
லியோ திரைப்படத்திற்கு பிறகு வந்த எந்த படமும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை. அயலான் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டிய நிலையில் மற்ற எந்த படமும் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. இந்த நிலையில் மலையாள சினிமாவில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தற்போது தமிழகத்தில் வசூலை வாரி குவித்து வருகிறது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள் அங்கு இருக்கும் குணா குகையில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பது தான் கதை. தமிழ்நாட்டில் இந்த கதை நகர்வதால் படம் முழுக்க தமிழ் வசனங்கள் அதிக அளவில் இருக்கிறது. மேலும் குணா திரைப்படத்தில் வரும் கண்மணி அன்புடன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலும் இந்த படத்தில் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதனால் இந்த திரைப்படத்தை தமிழக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த திரைப்படமாக மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை குறித்து கேள்விப்பட்ட தோனி மற்றும் மற்ற சிஎஸ்கே வீரர்கள் நேற்று சத்தியம் திரையரங்குக்கு சென்று இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். தோனி வந்தது குறித்து யாருக்குமே தெரியாததால் அங்கு கூட்டம் கூடவில்லை.
திடீரென்று படம் முடிந்தவுடன் தோனி திரையரங்கை விட்டு வெளியே வந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் தோனி மற்றும் தீபக் சாகர் ஆகியோரை பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மீதான மோகம் தோனியையும் சிஎஸ்கே வீரர்களையும் விட்டு வைக்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தோனி ஒரு மலையாள படத்தை திரையரங்கில் சென்று பார்த்தது கேரளா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.