சென்னை : இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை விராட் கோலி செய்துள்ளார். மே 12 அன்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பங்கேற்றார். இது அவரது 250-வது ஐபிஎல் போட்டியாகும்.
அவர் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வகையில் அவர் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 250 போட்டிகளில் விளையாடி மாபெரும் ஐபிஎல் சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையை இனி எந்த வீரராலும் முறியடிக்க முடியாது என கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார். தோனி 2063 போட்டிகளிலும், ரோகித் சர்மா 256 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 255 போட்டிகளிலும் விளையாடி முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளுக்காக இத்தனை போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
ஒரே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே 250 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் தோனி இடம் பெற்றுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 233 போட்டிகளில் விளையாடி உள்ளார். ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 211 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தோனி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் இருந்தாலும் அவர்களால் விராட் கோலியின் சாதனையை முந்த முடியாது. தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி அல்லது விலக்கப்பட்டு வேறு அணிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேறு எந்த வீரராலும் இனி ஒரே அணிக்காக 250 போட்டிகளில் விளையாடி, விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியாது எனக் கூறப்படுகிறது. அப்படி முறியடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வீரர் ஒரே அணியில் விளையாட வேண்டும்.