சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி தற்போது போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு திடீரென்று பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தோனியின் முடிவு குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வினும், அவருடைய நண்பரும் கிரிக்கெட் வல்லுனருமான பிரசன்னாவும் தங்களுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அஸ்வின், ஒரு சீசன் தொடங்குவதற்கு முன்பு தோனி இந்த முடிவை எடுத்திருப்பது நிச்சயம் ஆச்சரியம் அளிக்கிறது. அவர் கொஞ்சம் கூட சுயநலம் இன்றி இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது தோனியால் மட்டுமே முடியும் என்று அஸ்வின் பாராட்டினார். இதனை தொடர்ந்து பேசிய பிரசன்னா, தோனி நினைத்திருந்தால் சாம்பியன் பட்டத்தை வென்ற உடனே கடந்த ஆண்டு ஐ பி எல் போட்டியிலிருந்து விலகி இருக்கலாம்.
ஆனால் அடுத்த சீசன் விளையாட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தன்னுடைய உடல் தகுதியை மீட்டு இருக்கிறார். தற்போது சிஎஸ்கேவுக்கு அமைந்திருக்கும் அணியும் பலமாகவே இருக்கிறது. இதனால் தோனி நினைத்திருந்தால் இந்த சீசன் முழுவதும் விளையாடி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கலாம். நான் இருந்தவரை பல கோப்பைகளை வென்று கொடுத்து விட்டேன் என்று சுயநலமாக முடிவெடுத்து இருக்கலாம்.
ஆனால் அவர் சிஎஸ்கே அணியை மிகவும் நேசிக்கிறார். சிஎஸ்கே அணியை ஒரு குடும்பமாகவே தோனி பார்க்கிறார். தாம் சென்ற பிறகு அணி சரிவை சந்திக்கக்கூடாது என்பதற்காகத்தான் தோனி இப்படி ஒரு தியாகத்தை செய்து இருக்கிறார். இந்த சீசன் முழுவதும் ருதுராஜ்க்கு அவர் நல்ல வழிகாட்டியாக இருப்பார்.
அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு செல்வார். இதன் மூலம் சிஎஸ்கே அணி அடுத்த சீசனிலும் சிறப்பாக விளையாடக் கூடும். இப்படி எந்த ஒரு வீரர் நினைக்க கூடும்? இதற்காகவே தோனியை நான் பாராட்டுகிறேன். இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களை பின்னால் நின்று வழி நடத்துவது தான் தோனியின் ஸ்டைல்.
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடைபெறுவதற்கு சில மாதத்திற்கு முன்பு தோனி கேப்டன் பதவியை விட்டு சென்றார். அதேபோன்று இன்னும் 10 டெஸ்ட் விளையாடு இருந்தால் 100 டெஸ்ட் போட்டிகளில் தோனி விளையாடி இருப்பார். ஆனால் அதையும் கண்டுகொள்ளாமல் தோனி ஆஸ்திரேலிய தொடர் பாதியில் விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுத்தார் என்று பிரசன்னா பாராட்டியுள்ளார்.