சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கான காரணம் குறித்து மேலும் ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்த தொடர் முடிந்தவுடன் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து அவர் ஓரளவு மீண்டு வந்தாலும் அவருக்கு இன்னும் முழங்காலில் தசை நார் கிழிசல் இருப்பதாக சொல்லப்பட்டது.

அவர் இந்த ஆண்டு ஆடும் போட்டிகளிலும் ரன் ஓடுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி இடுப்பு வலி வராமல் இருப்பதற்கான மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பெல்ட் ஒன்றை அணிந்து இருந்தார். அதை அடிக்கடி அவர் சரி செய்து கொண்டே இருந்தார்.
அடுத்து சிஎஸ்கே அணி பேட்டிங்கின் போது தோனி வீரர்கள் அறையில் இருந்த போது அந்த பெல்ட்டை மேல்புறமாக அணிந்திருந்தார். இதன் மூலம் அவருக்கு கடுமையான முதுகு வலி இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சை செய்த பின் சிலருக்கு முதுகு வலி அல்லது இடுப்பு வலி ஏற்படும், அப்போது இந்த பெல்ட்டை அணிந்து கொள்வார்கள்.
அந்த வகையில் பார்த்தால் தோனி கடுமையான வலியுடன் விளையாடி வருவது தெரிகிறது. சிஎஸ்கே அணியில் வேறு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லாத நிலையில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கும் நியூசிலாந்தின் டெவான் கான்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பதால் தோனி ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
அவரை விடுத்துப் பார்த்தால் ஆரவல்லி அவனிஷ் என்ற இளம் வீரர் மட்டுமே விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் தோனி அணியின் நலனுக்காக வலியுடன் விளையாடி வருவதாக சிஎஸ்கே வட்டாரம் தெரிவித்து இருக்கிறது. இதை எடுத்து அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பே இல்லை எனவும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெற்று விடுவார் எனவும் கூறப்படுகிறது.