சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி குறித்து ருதுராஜ் கெய்க்வாட்-டம் தோனி கடந்த சீசனின் போதே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பதவி விலகிய நிலையில், புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பின், புதிய கேப்டனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கேப்டன்சியால் தனது ஆட்டம் பாதிப்பாக கூறி ஜடேஜா விலக, மீண்டும் பதவிக்கு வந்த தோனி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.

தற்போது நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே அணி களமிறங்க உள்ள சீசனில், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன்சியை வழங்கியுள்ளார் தோனி. அவருக்கு வயது குறைவு மற்றும் கேப்டன்சி அனுபவம் இருப்பதால், சிஎஸ்கே அணியின் முடிவை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், கடந்த சீசனின் போது என்னிடம் கேப்டன்சி குறித்து தோனி சூசகமாக பேசினார்.
எதற்கு தயாராக இருக்குமாறும், பொறுப்பு தேடி வரும் போது ஆச்சரியமடைய கூடாது என்று என்னிடம் கூறியிருந்தார். அதன்பின் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் நான் இணைந்த போது, பயிற்சி போட்டிகளின் போது சில சோதனைகளை கொடுத்தார். இதனால் கேப்டன் பொறுப்பால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸை சந்தித்தேன்.
அப்போது அவரிடம், சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஆர்சிபி அணிக்காக விளையாடுவீர்கள் என்றும், அந்த அணியை வழிநடத்துவீர்கள் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறினேன். தற்போது நாங்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் டாஸ் போடுவதற்காக நிற்க போகிறோம். அதனை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடரிலேயே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள முதல் நாள் ஆட்டத்தில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனிலேயே தோனி ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமல்லாமல் ஜடேஜாவுடன் ஆலோசனை நடத்தியிருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஜடேஜாவுக்கான முக்கியத்துவம் சிஎஸ்கே அணியில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியா பக்கங்களிலும் அதிகரித்துள்ளதாக பார்க்க முடிவதாக விமர்சகர்கள் கணித்துள்ளது.