சென்னை: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி ஐந்து தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் விளங்குகிறார்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு தோனி தனது பதவியை ராஜினாமா செய்து வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தான் களமிறங்குகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் தோனி கடைசி கட்டத்தில் தான் களமிறங்கி ரன்களை சேர்த்து வருகிறார்.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டேரல் மிட்செலுக்கு தோனி சிங்கிள்ஸ் ஓடாமல் நின்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி பலரும் தோனியை விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் தோனிக்கு காலில் தசை சிதைவு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் தோனி 100% உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
ரசிகர்களுக்காக தாம் இந்த தொடரில் விளையாடுவதாக முடிவு எடுத்து தோனி விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இதனை வழக்கம் போல் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தோனி செய்வது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தோனி 100% உடல் தகுதியில் இல்லாத நிலையில் அணியில் தற்போது நீடித்து வருகிறார். இதுதான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நூறு சதவீதம் உடல் தகுதி இல்லை என்றால் பிளேயிங் லெவனில் விளையாடுவது தவறு. அதாவது காயத்தை மறைத்து விட்டு போட்டியில் பங்கேற்பது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக காயங்களை மறைத்துக் கொண்டு விளையாடியது கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தோனியும் அதே தவறை தான் செய்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் வீரர்கள் காயங்களை மறைத்து விளையாடுவது குறித்து தோனியே ஒரு முறை கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் தாம் 100% உடல் தகுதியில் இல்லை என்றால் நான் அந்த போட்டியிலே விளையாட மாட்டேன். அது அணிக்கு நான் செய்யும் துரோகம். ரசிகர்களுக்கு நான் செய்யும் தவறாக கருதுகின்றேன். அது மட்டுமில்லாமல் வேறு ஒரு வீரரின் வாய்ப்பையும் நான் தட்டிப் பறிக்கின்றேன். என்னால் 100% முதல் தகுதியை பெற முடியவில்லை என்றால் நான் விலகி இருப்பேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அதே தோனியே காலில் காயம் ஏற்பட்ட பிறகும் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இதனால் தோனி 100% பேட்ஸ்மேனாக களத்தில் செயல்பட முடியவில்லை. முக்கிய கட்டத்தில் ரன்களை ஓட முடியவில்லை. ஒரு வீரர் காயம் அடைந்து விட்டால் அவர் விலகுவது தான் சரியாக இருக்கும். இந்த நிலையில் தோனிக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது. விதி என்பது இங்கு அனைவருக்கும் ஒன்றுதானே? இதனால் தோனி செய்வதை ரசிகர்கள் கொண்டாட்ட மனப்பான்மையில் இருந்து விலகி நடுநிலையாக பார்த்தால் இதில் ஒளிந்திருக்கும் தவறு தெரியும்.