சென்னை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் 42 வயதிலும் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக களமிறங்குவதற்கு பின் உள்ள காரணங்களை பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. சென்னை அணி தரப்பில் மீண்டும் எம்எஸ் தோனி கேப்டனாக களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனே கடைசி என்று பார்க்கப்பட்ட சூழலில், இறுதிப்போட்டியில் வென்ற பின் ரசிகர்களின் அன்புக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவதே சரியானதாக இருக்கும் என்று தோனி கூறியிருந்தார்.
இருப்பினும் உடல்தகுதியை பொறுத்து மினி ஏலத்திற்கு முன் முடிவு எடுக்கப்படும் என்று தோனி தெரிவித்தார். இந்த நிலையில் 42 வயதிலும் முழு உடற்தகுதியுடன் இருக்கும் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சியை அணிந்து சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி முறையாக களமிறங்கவுள்ளார். இதனை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

42 வயதில் உள்ள ஒரு வீரரை எந்தவொரு ஐபிஎல் அணியும் தங்கள் அணியின் பிளேயிங் லெவனிலேயே சேர்த்து கொள்ள விரும்பாத சூழலில், சிஎஸ்கே அணி கேப்டனாக களமிறக்குவதற்கு அவர் பின்னிருக்கும் பிராண்ட் வேல்யூ-வே காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், தோனியின் பிராண்ட் வேல்யூ தான் சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ-வாகவும் இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் அனைவரும் தோனிக்காகவே அந்த அணியை ஆதரித்து வருகிறார்கள். தோனியை கடந்து பார்த்தோம் என்றால், முன்னாள் வீரர் ரெய்னாவுக்கு ரசிகர்கள் இருந்தனர். அதன்பின் தற்போது ஆடி வரும் வீரர்களில் நீண்ட காலமாக ஜடேஜா விளையாடினாலும் அவருக்கான ரசிகர்கள் என்று பார்த்தால், ஒப்பீட்டளவில் குறைவு தான். இதனால் தோனியை அணியில் வைத்து கொள்ள வேண்டிய தேவையும் சிஎஸ்கே அணிக்கு உள்ளது.
இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சூப்பர்ஸ்டார் வீரராக உருவாகியுள்ளார். இதனால் நடப்பு சீசனில் தோனியை பயன்படுத்தினால், அடுத்த ஆண்டில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக உருவெடுப்பார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாடை நியமிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதேபோல் அந்த அணியின் பிராண்ட் வேல்யூ-வும் குறையாது என்று பார்க்கப்படுகிறது.