சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினாலும் கூட அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஈர்ப்பு கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதற்கு எடுத்துக் காட்டாக சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது தன்னை திரையில் காட்டிய கேமரா மேனை அடிப்பது போல சைகை செய்தார் தோனி.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது கடைசி 5 ஓவர்களில் ருதுராஜ் கெய்க்வாட் - சிவம் துபே ஜோடி அதிரடியாக ரன் குவித்தனர். தோனி கடைசி சில ஓவர்களில் தான் பேட்டிங் செய்ய வருவார் என்பதால் ரசிகர்கள் பலர் விக்கெட் விழுந்தால் தோனி பேட்டிங் செய்ய வருவாரா? என காத்திருந்தனர். இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றதால் ரசிகர்கள் இன்னும் அதிக ஆவலுடன் தோனிக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் தோனி அறையில் இருந்ததை கேமரா மேன் பதிவு செய்தார். அது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதை அடுத்து தோனி தன் கையில் இருந்த பாட்டிலை வைத்து கேமரா மேனை அடிப்பது போல சைகை செய்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
பின்னர் இந்தப் போட்டியில் 20வது ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பேட்டிங் செய்தார். அந்த ஒரு பந்தில் ஃபோர் அடித்து சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 210 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி தோற்றாலும் தோனி பேட்டிங் செய்ததை பார்த்த மகிழ்ச்சியுடன் சிஎஸ்கே ரசிகர்கள் களைந்து சென்றனர்.