சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு முக்கிய வீரரை தேர்வு செய்ததாகவும், அவர் அணிக்காக விளையாடாமல், அவருக்கான தனிப்பட்ட ஆட்டத்தை ஆடுவதில் மட்டுமே தீவிரமாக இருந்ததாகவும், அவருக்காக பல அடிகள் இறங்கி சென்றும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும், அதனால் அவரை அணியை விட்டு நீக்க முடிவு செய்ததாகவும் கூறி இருக்கிறார் தோனி.
தோனி அளித்த இந்தப் பேட்டியில் அந்த வீரரின் பெயரை குறிப்பிடவில்லை. மாறாக அவர் கிரிக்கெட் உலகின் முக்கியமான வீரர் என்று மட்டும் சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார். தோனியின் இந்த பேட்டி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது. பலரும் அந்த முக்கியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் என குறிப்பிட்டு வருகின்றனர்.

இது குறித்து தோனி அளித்துள்ள அந்த பேட்டியில், "எங்கள் அணியில் நாங்கள் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம். ஆனால், அவர் எங்கள் அணியின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாக இருந்தார். நாங்கள் அவரிடம் என்ன எதிர்பார்த்தோம்? ஒட்டுமொத்த அணியின் இலக்கை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து வருமாறு கூறினோம். அவர் அதை செய்தால் நாங்கள் மூன்று அடி அவருக்காக இறங்கிச் செல்ல தயாராக இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இரண்டாம் கட்டமாக, நீங்கள் உங்கள் ஆட்டத்தை ஆடுங்கள். ஆனால், அணியை பாதிக்காத வகையில் செயல்படுங்கள் என்றோம். அதுதான் இரண்டாவது மிகச் சிறந்த வாய்ப்பு. மூன்றாவது அவரை அணியை விட்டு அனுப்புவது தான் ஒரே வாய்ப்பு." என்றார்.
மேலும், "அது வியாபாரமோ, விளையாட்டோ நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்கள் அணியின் இலக்கு என்பது ஒரு வீரரிடம் இருந்து அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான். அவர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டால் நான் அவரை அணியின் சொத்தாக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்பேன். ஆனால் அவர்களும் அதை புரிந்து கொண்டு அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அவர்கள் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவில்லை என்றால், இரண்டாவது வாய்ப்பைத் தான் நான் எடுக்க முடியும். ஒரு நபருக்காக ஒட்டுமொத்த அணியும் மாறுவதை நான் விரும்பவில்லை. அது மிகவும் தவறு. எனவே, அவரை அணியவிட்டு அனுப்புவது தான் ஒரே வழி." என்று கூறினார் தோனி.
மேலும், "அவர் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் அவரை அணியை விட்டு நீக்கித் தான் ஆக வேண்டும். அவருடைய இடத்தை வேறு யாராவது வந்து நிரப்புவார்கள். அப்படி மாற்றாக வருபவர்கள் அந்த சிறந்த வீரருக்கு இணையாக செயல்படவில்லை என்றாலும் அணி சிறப்பாக செயல்பட உதவுவார்கள்." என்று தோனி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் எந்த வீரரை பற்றி குறிப்பிட்டார் என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது.