ஜாம்நகர் : ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்தையொட்டி நடக்கும் முந்தைய நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் நிறுவனத்தை சேர்ந்த ராதிகா மெர்சண்ட்-க்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகளின் போது ஒரு ஃபோஃபாவில் முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஆனந்த் அம்பானி, 6 மாதங்களில் உடல் எடையை குறைத்து பலருக்கும் ஆச்சரியமளித்தார்.

இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. மும்பை அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகளில் ஆனந்த் அம்பானியும் ஒருவர். இவரும், ராதிகா மெர்சண்டும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு குடும்பத்தினர் ஒப்புதலோடு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணம் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக ராஞ்சியில் இருந்து ஜாம்நகர் புறப்பட்டுள்ளார் தோனி. மும்பை அணியின் உரிமையாளராக இருந்தாலும், முகேஷ் அம்பானி தோனியின் தீவிர ரசிகர்களில் ஒருவர். ஒருமுறை பேருந்தில் இருந்து இறங்கி மைதானத்திற்கு வந்த தோனியை நேரடியாக வந்து வரவேற்றார் முகேஷ் அம்பானி.
அதேபோல் தோனி மட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மும்பை வீரர் இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா, சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ, மும்பை அணியின் நிர்வாகிகளான ஜாகீர் கான், ஜெயவர்தனே உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் புறப்படும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றனர். இதனால் இந்திய அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் சங்கமிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.