சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய தோனி கிரிக்கெட் போட்டிகளினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்பது குறித்து யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் குடும்பத்தினருடனும் மோட்டார் பைக்குகளுடனும் நேரம் செலவிட்டு மன அழுத்தத்தை போக்குவேன் என கூறிய தோனி, செல்லப் பிராணியான நாய் நம் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் என்றும், நாம் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து வீட்டுக்கு வந்தாலும் நம் மீது மாறாத அன்புடன் வரவேற்கும் எனவும் கூறி இருக்கிறார்.

இது குறித்து தோனி அந்தப் பேட்டியில் பேசுகையில், "நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின் என் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்பினேன். அதே சமயம் மனதளவிலும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினேன். என் மனதில் எப்போதும் ஒரு உத்வேகம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். எனக்கு விவசாயம் செய்ய மிகவும் பிடிக்கும். மேலும், மோட்டார் பைக்குகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரியமிக்க கார்களை சேகரிக்க தொடங்கினேன். இது போன்ற விஷயங்கள் என்னை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வரும்." என்றார்.
மேலும், "நான் மன அழுத்தத்திற்கு உள்ளானால் எனது மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களை நிறுத்தி வைத்திருக்கும் கேரேஜ்க்கு செல்வேன். அங்கு சில மணி நேரத்தை செலவிடுவேன். அப்போது என் மனம் அழுத்தத்திலிருந்து வெளிவரும். அதன் பின் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவேன்" என்றார் தோனி.
மேலும், "நான் சிறு வயதில் செல்லப்பிராணிகளுடன் வளர்ந்தேன். அது பூனையோ.. நாயோ.. ஆனால் எனக்கு நாய்களை மிகவும் பிடிக்கும். அவை நம் மீது அளவு கடந்த அன்பை செலுத்தும். நான் இதற்கு முன்பும் ஒரு பேட்டியில் இது பற்றி கூறி இருக்கிறேன். நான் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து வீட்டுக்கு வந்தாலும், என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும்" என்றார் தோனி.