சென்னை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி தனது 42 வது வயதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அடுத்த ஆண்டும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், "தொழில் முறை விளையாட்டில் வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள்" என தோனி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
தோனிக்கு 42 வயதானபோதும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டார். அவருக்கு காலில் காயம் இருந்ததால் அதிக நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை. எனினும், அவர் ஒவ்வொரு போட்டியிலும் சில பந்துகளை சந்தித்தாலும், சுமார் 220க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ரன் குவித்தார். விக்கெட் கீப்பிங்கில் இளம் வீரரைப் போலவே செயல்பட்டார்.

இந்த நிலையில் வயதான காலத்தில் எப்படி உடற் தகுதியை மேம்படுத்துவது என்பது குறித்து துபாய் ஐ 103.8 என்ற யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். இது குறித்து தோனி பேசுகையில், "மிக கடினமான விஷயம் என்னவென்றால் நான் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. எனவே, நான் முழு உடற் தகுதியுடன் இருப்பது அவசியம். மேலும், உடற் தகுதியுடன் இருக்கக்கூடிய இளம் வீரர்களுடன் நான் போட்டி போட வேண்டும். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். தொழில் முறை விளையாட்டு என்பது எளிதானதல்ல. உங்களுக்கு வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள்" என்றார்.
மேலும், "நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் மற்ற வீரர்களை போல நீங்களும் உடற் தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால், வயது உங்களுக்கு அந்த கருணையை வழங்காது. எனவே நாம் உணவு பழக்கம், உடற்பயிற்சி போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நல்ல வேளையாக நான் சமூக ஊடகங்களில் அதிகம் ஈடுபடுவதில்லை. எனவே, எனக்கு கவனச் சிதறல் அதிகமாக இல்லை" என்றார் தோனி.
இந்தப் பேட்டியில், சமூக வலைதளங்களில் ட்விட்டர் பிடிக்குமா? இன்ஸ்டாகிராம் பிடிக்குமா? என்ற கேள்விக்கு ட்விட்டரில் எது எழுதினாலும் சர்ச்சையாக மாறி விடுகிறது. எனவே, இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறேன் என தோனி கூறி இருக்கிறார்.